Tuesday, May 28, 2013

நான் ஒரு முழு விழிப்புணர்வு

ஓஷோவை ஒரு புரட்சி என்றே கூறுவேன். நம் சான்றோர்கள் தீய எண்ணங்களை அடக்க வேண்டும் என்பர். எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம் என ஓஷோ கூறுவார். இது என்ன புதுமை என்று நினைக்க தோன்றுகிறதா? எண்ணெங்களில் நல்லவை கெட்டவை என்று ஏதும் இல்லை, அவை எண்ணங்கள் அவ்வள்வுதான் என்று சொல்வார். தெருவில் ஓடும் பேருந்தை பார்ப்பதுப் போல் மனதில் எழும் எண்ணங்களை கவனிக்க சொல்வார். எண்ணங்களின் செயல்பாட்டை கவனிக்கும்பொழுது நாம் விழித்துக் கொள்கிறோம். நாம் விழித்துக்கொள்ள துவங்கினால் எண்ணங்களும் மறைய துவங்கும். புத்தர் ஞானம் பெற்றப் பிறகு, “நான் செய்தது எல்லாம் ஒரு வெற்றிச் செயல் அல்ல,  நான் ஒரு முழு விழிப்புணர்வு அவ்வளவுதான்”, என்று கூறினார். ஆக விழிப்புணர்வு என்றால் மனம் வெற்றாக இருப்பதே ஆகும். மனம் மனிதனை ஆண்டுக்கொண்டிருக்கிறது. மனிதன் மனதையாளத் துவங்கினால் தான் வாழ்க்கை சிறக்கும்.

மகிழ்ச்சி தழைக்கட்டும் ! !

Friday, May 24, 2013

செம்மை ஆக்குதல்...??

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)

சித்தர்கள் தங்கள் மெய் உணர்விலிருந்து அருளிய பாடல்களுக்கு விளக்கம் அளிக்க முனைந்தால் பொருள்  பிறழச்சி தான் நேரும். அதனால் சுருக்கமாக உள்ளதை அப்படியே எளிய நடையில் தருகிறேன்.
 மந்திரம் ஓதுதல், மூச்சுப் பயிற்சி, குணடலினி எழுப்பி ஊழ்கம் (தியானம்) பழகுதல் யாவும் மனதை செம்மையாக்கும் வழிகள். மனமது செம்மையான பின் அவன் பேசும் சொற்கள் யாவும் மந்திரமே.
ஆனால் செம்மையாக்குவது என்றால் என்ன? இந்த இடத்தில் என்ன பொருளை தரும்? செம்மையாக்குவது என்றால் மனதை கல் போல் ஆக்குதலா? அறியாத காலத்தில் இந்தப் பாடலை படிக்கும் பொழுது நான் அப்படி தான் புரிந்துக் கொண்டேன். செம்மை என்ற தமிழ்ச்சொல்லுக்கு அகரமுதலியில் பொருள் தேடினால் கூட இப்பாடலை உணரமுடியாது.
செம்மையாவது என்றால் இந்த இடத்தில் மனமற்ற நிலையைத் தான் குறிக்கிறது. மனதின் தன்மையை புரிந்துக்கொண்டால் அதுவே இந்த நிலையை அடைய வழி வகுக்கும். மனதின்  நுண்ணிய செயல்பாடுகளை அறிந்துக் கொள்ள ஓஷோவைத் தவிற வேறு யாரும் அவ்வளவு எளிமையான நடையில் விளக்க முடியாது. படியுங்கள் அவரது நூல்களை. மனதை செம்மை படுத்துங்கள்.

மகிழ்ச்சி தழைக்கட்டும் ! !